வரி வசூல் இல்லாததால் நகராட்சிக்கு நிதி கட் மக்கள் முற்றுகை
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி 8வது வார்டு சிவன்காளைத்தேவர் தெருவில் சாக்கடை கழிவு நீர் செல்ல முறையான வடிகால் வசதி இல்லாமல் கழிவு நீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்குகிறது. இதை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை கவுன்சிலர் பூமாராஜா தலைமையில் மீண்டும் முற்றுகையிட்டனர். கழிவுநீர் செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதாக கமிஷனர் சக்திவேல் சமரசம் செய்தார்.கமிஷனர் கூறுகையில், ''வரி வசூல் முழுமையாக நடக்காததால் நகராட்சிக்கு 2 ஆண்டுகளாக நிதி ஒதுக்கப்படவில்லை. நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது வரி வசூலை தீவிரப்படுத்தியுள்ளோம். விரைவில் நிதி பெற்று அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்'' என்றார்.