மேம்பாலத்திற்கு தென்கரையில் பில்லர் பணிகள் இன்று துவக்கம்
மதுரை: மதுரை கோரிப்பாளையம் மேம்பால பணிகளில் வைகை தென்கரையில் வீடுகள் இடிக்கப்பட்ட பகுதியில் பில்லர் அமைக்கும் பணிகள் இன்று(பிப்.12) துவங்குகிறது.கோரிப்பாளையம் பகுதியில் ரூ.190 கோடி மதிப்பில் 3 கி.மீ., மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. இதன் செல்லுார் பாலம் ஸ்டேஷன் பகுதி பிரிவில் பில்லர்களுக்கு இடையே மேல்தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. கோரிப்பாளையத்தில் இருந்து வைகையை கடந்து தென்கரை பகுதிக்கு பாலம் அமைப்பதற்காக ஆற்றுக்குள் 16 பில்லர்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வடகரை பகுதியில் இருந்து 8 பில்லர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இந்த பாலம் வைகை ஆற்றின் தென்பகுதியில் அண்ணாத்துரை சிலை அருகே ஏ.வி., பாலத்தின் மேற்கு பகுதியில் வந்து சேரும். இப்பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள் இருந்தன. அவற்றை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இங்கிருந்த 39 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பாலம் இறக்கப்பகுதிக்காக ஆற்றுக்குள் இருந்து 6 பில்லர்கள் அமைய உள்ளன. பணிகளை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் சுகுமாரன் ஆய்வு செய்தனர்.