போலீஸ் விசாரணையில் மரணம்; இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை: மதுரை அண்ணாநகர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதில் ஒருவர் மரணமடைந்த வழக்கில் இறுதி அறிக்கையை விரைந்து 60 நாட்களில் தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை வண்டியூர் தினேஷ் குமாரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா உள்ளிட்ட சில போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். வண்டியூர் கால்வாய் பகுதியில் தினேஷ் உடல் மீட்கப்பட்டது. போலீசார் அடித்து கொலை செய்ததாகக்கூறி அவரது உறவினர்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மரண வழக்கை போலீசார் முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. சி.பி.சி.ஐ.டி.,போலீசாரின் விசாரணைக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் மீது பட்டியல் இன வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்கு பதிய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் தினேஷ்குமாரின் தாய் முத்துலட்சுமி மற்றொரு மனு செய்தார். அக்.10 ல் இரு நீதிபதிகள் அமர்வு சி.பி.சி.ஐ.டி.,விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராம கிருஷ்ணன் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு,'ரசாயன பகுப்பாய்வு, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை தேவைப்படுகிறது. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யஅவகாசம் தேவை,' என தெரிவித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விபத்து அல்லது போலீஸ் காவலில் மரணம் நிகழ்ந்ததா என்பது இறுதி அறிக்கை தாக்கல் செய்தால்தான் தெரியவரும். இறுதி அறிக்கையை சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விரைந்து 60 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.