உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொட்டு சுரேஷ் கொலை வழக்கு ‛அட்டாக் பாண்டி ஜாமின் மனு சி.பி.சி.ஐ.டி., பதில் மனு செய்ய உத்தரவு

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு ‛அட்டாக் பாண்டி ஜாமின் மனு சி.பி.சி.ஐ.டி., பதில் மனு செய்ய உத்தரவு

மதுரை : தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த 'பொட்டு' சுரேஷ் கொலை வழக்கில் கைதான 'அட்டாக்' பாண்டி ஜாமின் அனுமதிக்கக் கோரிய மனுவிற்கு சி.பி.சி.ஐ.டி.,போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. 'பொட்டு' சுரேஷ் 2013 ஜன.,31 ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த, மதுரை வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் 'அட்டாக்' பாண்டியை 2015 செப்.,21 ல் போலீசார் கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் ஏற்கனவே சில முறை 'அட்டாக்' பாண்டியின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையில் ஒரு நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் அவருக்கு உயர்நீதிமன்றக் கிளை ஆயுள் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருக்கு அவ்வழக்கில் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. 'அட்டாக்' பாண்டி, 'பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கைதாகி 10 ஆண்டுகளாகிறது. இதில் தொடர்புடைய சிலர் ஜாமினில் வெளியே வந்துள்ளனர். எனக்கும் ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். மதுரையில் ராமகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய முயன்றதாக புதுார் போலீசில் பதிவான வழக்கிலும் அவர் ஜாமின் மனு செய்தார். நீதிபதி எஸ். ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜெகதீஷ் பாண்டியன் ஆஜரானார். சி.பி.சி.ஐ.டி., மற்றும் புதுார் போலீசார் அக்.7 ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை