உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராமநாதபுர பாசனம், 58 கிராம கால்வாய்க்கு ஒரே நேரத்தில் தண்ணீர் வழங்க வேண்டும்

ராமநாதபுர பாசனம், 58 கிராம கால்வாய்க்கு ஒரே நேரத்தில் தண்ணீர் வழங்க வேண்டும்

மதுரை: வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் கண்மாய், உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற அரசாணையை நீர்வளத்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என மதுரை மாவட்ட நன்செய் விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அரசாணைப்படி இரண்டு பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் கூட ராமநாதபுரம் பாசனத்திற்கு திறக்க முடிகிறது. 58 கிராம கால்வாய்க்கு 2021, 2022 ல் தண்ணீர் திறக்கப்பட்டதால் 300 அடிக்கு கீழே இருந்த நிலத்தடி நீர்மட்டம் நன்றாக அதிகரித்தது. 2024 ல் தண்ணீர் தராததால் நிலத்தடி நீர்மட்டம் மறுபடி கீழே இறங்கியது. உசிலம்பட்டியில் 500 ஏக்கரில் மல்லிகை சாகுபடி, மாற்றுப்பயிராக சம்பங்கி, கோழிக்கொண்டை, பிச்சிப்பூ, கனகாம்பரம் சாகுபடியும் சுரைக்காய், பீர்க்கங்காய், புடலை சாகுபடிக்கு தண்ணீர் தேவை. வைகை அணை 69 அடியை எட்டும் போது ராமநாதபுர பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் அதேநேரத்தில் 58 கிராம கால்வாயிலும் தண்ணீரை திறக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் அரசாணை உள்ளது. இந்த அரசாணையை தமிழக அரசு தமிழில் மாற்றி வெளியிட்டால் தான் நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விடுவர். வைகை அணை மதகில் இருந்து உத்தப்பநாயக்கனுார் வரையான 17 கி.மீ., நீள கால்வாய் 'ஜீரோ பாயின்ட்' எனப்படும். அங்கிருந்து கால்வாய் இரண்டாக பிரியும் 11 கி.மீ., நீள இடது கால்வாய், 10 கி.மீ., நீள வலது கால்வாய்களில் 316 கனஅடி நீரை கொண்டு செல்ல முடியவில்லை. தற்போது வரை 110 கனஅடி தண்ணீரே வெளியேற்றப்படுகிறது. எனவே இரு கால்வாய்களை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி 316 கனஅடி தண்ணீரை விட வேண்டும். மேலும் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கேற்ப ஜீப் டிராக் அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sangarapandi
அக் 26, 2025 09:08

வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் போது ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் கண்மாய், உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற அரசாணைஉள்ளது . ஆனால் வைகைஆற்றின் மூல நதி வருசநாடு பகுதி வழியாக நல்ல மழை காலங்களில் வெள்ளமென நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த காலங்களில் அதிகப்படியான தண்ணீரை தாழையூத்து வழியாக அய்யனார் கோயில் செக் டேமிற்கு வரும்படியான கால்வாய் அமைத்து செக் டேம் மூலம் சாப்டூர், குடிசேரி கண்மாய்களை நிரப்பி அங்கிருந்து சேடப்பட்டி மற்றும் கல்லுப்பட்டி யூனியன் பகுதிகளில் உள்ள கண்மாய் களில் நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிப்பாக நடைபெற தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை