உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடி: தரத்தை கண்காணிக்குது அ.தி.மு.க., கவுன்சிலர் குழு

மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடி: தரத்தை கண்காணிக்குது அ.தி.மு.க., கவுன்சிலர் குழு

மாநகராட்சி பகுதியில் 3 மாதங்களாக தென்மேற்கு, வட கிழக்கு பருவ, கோடை மழையால் வாகனங்கள் செல்லும் பெரும்பாலான ரோடுகள், 'பல்லாங்குழிகளாக' மாறிவிட்டன. வாகன ஓட்டிகள் தினமும் சாகச பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் நாள்பட்ட உடல் வலியால் அவதிப்படுகின்றனர். பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குடியிருப்பு பகுதிகளில் சந்து பொந்துகளில் உள்ள ரோடுகளை கூட குறுக்கே உடைத்து 'குழாய் பதிக்கிறேன்' என்ற பெயரில் ஒப்பந்ததாரர்கள் சேதப்படுத்துகின்றனர்.மோசமான ரோடுகள் குறித்து மாநகராட்சி கவுன்சில் கூட்டங்களில் அ.தி.மு.க., தொடர்ந்து குற்றம்சாட்டியது. கடைசி கூட்டத்தில் ரோடுகள் தரமின்மை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கேள்வி எழுப்பினார். அவரது கருத்துக்கு காங்., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் மாநகராட்சி எல்லைக்குள் 398 ரோடுகளை சீரமைக்க ரூ.44.97 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.கமிஷனர் தினேஷ்குமார் கூறியதாவது: மாநகராட்சி எல்லைக்குள் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்தால் ரோடுகள் சேதமடைந்து வருகின்றன. இதை சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற ரோடுகள் மேம்பாடு திட்டத்தில் 241,மாநில நிதிக்குழு ஊக்கத் தொகை மானியத்தில் 15, மாநில நிதிக்குழு மானியத்தில் 112, மாநகராட்சி பொது நிதியில் 30 என மொத்தம் 398 ரோடுகள் சீரமைக்க நகராட்சி நிர்வாக ஆணையகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 69.71 கி.மீ., நீளத்தில் புதிய, ரோடுகள் சீரமைப்பு பணி நடக்கவுள்ளது. இதற்கான டெண்டர் ஜன.22, 24ல் கோரப்பட்டு விரைவில் ரோடுகள் சீரமைக்கப்படும் என்றார்.

அ.தி.மு.க., கண்காணிக்கும்

மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: ரோடுகளை சீரமைக்க அ.தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தியது. மாநகராட்சி ரோடு என்றாலே அதன் தரம் கேள்விக்குறியாகிறது. மக்கள் நலன் கருதி அ.தி.மு.க., கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதனால் 398 ரோடுகளும் நகராட்சி நிர்வாக விதிகள் படி அமைக்கப்படுகிறதா என்பது குறித்து அ.தி.மு.க., கவுன்சிலர் தலைமையில் ஆய்வு செய்ய உள்ளோம். தரமின்றி அமைக்கப்பட்டால் ஆதாரங்களுடன் கவுன்சில் கூட்டத்தில் தெரிவிப்போம். தரமானது என்றால் பாராட்டுவோம் என்றார்.

மேலமடை, கோரிப்பாளையம், பழங்காநத்தம், செல்லுார்-குலமங்கலம் ரோடு உள்ளிட்ட இடங்களில் பாலப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மாற்றி அமைக்கப்பட்ட இடங்களில் ரோடுகள் பாடாவதியாக இருப்பதால் வாகனங்கள் குதித்து குதித்து விபத்து ஏற்படுத்தும் வகையில் செல்கின்றன. இதனால் மதுரைவாசிகள் தினமும் நரக வேதனையை அனுபவிக்கின்றனர்.

கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் பணிகள் நடப்பதால், யானைக்கல் பாலத்தில் இருந்து வைகை ஆற்றை கடந்து வடபகுதிக்கு செல்லும் வாகனங்கள், பந்தல்குடி பாலம் வழியாக செல்கின்றன. ஆரம்பத்தில் சரிசெய்த இந்த ரோடு தற்போது ஓ.சி.பி.எம்., பள்ளி வரை மோசமாக உள்ளது. வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன.மேலமடை சந்திப்பில் நடக்கும் பணிகளால், அண்ணாநகர் வழியாக போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாட்டுத்தாவணியை சுற்றியோ, வண்டியூரைச் சுற்றியோ வாகனங்கள் ரிங்ரோட்டை அடைந்து பின்னர் கருப்பாயூரணி பகுதிக்கு செல்கின்றன. இதில் வண்டியூர் அருகே ரிங்ரோடு பகுதியில் ஒரு கி.மீ., தொலைவுக்கு தார் பெயர்ந்துள்ளதால் ஜல்லிக்கற்களாக பரவிக் கிடக்கிறது. இதில் செல்லும் வாகனங்களால் புழுதி கிளம்புகிறது. மாற்றுப் பாதைகளை தவிர்க்கலாம் எனக்கருதி, வார்டுகள், சிறு தெருக்கள் வழியே சென்றால் அங்கு அதைவிட மோசமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை