பூட்டிக்கிடக்கும் ஊரக நுாலகங்கள்
பேரையூர: ஊரகப் பகுதிகளில் பூட்டிக் கிடக்கும் நுாலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.பேரையூர் தாலுகாவின் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்களில் 72 ஊராட்சிகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஊராட்சிகளில் பல ஆண்டாக ஊரக நுாலகங்கள் பூட்டிய நிலையில் உள்ளன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டிய நுாலகங்கள் பூட்டிக் கிடப்பதால் வாசகர்கள் வருத்தம் அடைகின்றனர்.இந்நுாலகங்களுக்கு நுாலகர்கள் உண்டா, இங்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா என எதுவுமே தெரியாத நிலை உள்ளது. கிராமத்தினர் அறிவை மேம்படுத்தவும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நகர் பகுதி வரை அலைக்கழிக்காமல் இருப்பதற்காகவும் கிராம அளவில் நுாலகங்கள் கொண்டுவரப்பட்டன.ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான ஊராட்சி நுாலகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. கிராமப்புற நுாலகம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே சிதைந்து போய்விட்டது. முடங்கிய நுாலகங்களை கணக்கெடுத்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.