மூளைச்சாவு அடைந்தவரால் ஆறு பேருக்கு மறுவாழ்வு ..
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த சஞ்சய் 22. இன்ஜினியரிங் பட்டதாரி. மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். டிச.,22ல் புதிய டூவீலர் வாங்குவதற்காக மதுரையில் உள்ள ஷோரூம் சென்றார். வாகனத்தை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக ஹெல்மெட்டை சரியாக அணியாமல் ஓட்டிச் சென்றார். கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டிச.,24ல் மூளைச்சாவு நிலையை அடைந்தார். உறுப்புகள் தானம் செய்ய உறவினர்கள் சம்மதித்தனர். சிறுநீரகங்களில் ஒன்று இதே மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொன்று திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. கல்லீரல் மதுரை வடமலையான் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கும் கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. இளைஞரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.