உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை
திருமங்கலம் : திருமங்கலம் அருகே மூளை நரம்பியல் பிரச்னையால் மூளைச் சாவு அடைந்ததால், உறுப்புகளை தானம் செய்த பெண் காயத்ரியின் 27, உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.திருமங்கலம் பள்ளக்காப்பட்டி தனியார் காஸ் நிறுவன தொழிலாளி சேதுபதியின் மனைவி காயத்ரி. மூன்று ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு பால் கொடுத்தபோது திடீரென மயக்கமடைந்த காயத்ரி, கீழே விழுந்தார்.கப்பலுார் ரிங் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச் சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தேவைப்படும் பிற நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டது. பின்னர் உடல் சொந்த ஊரான பள்ளக்காப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வருவாய் ஆய்வாளர் தனசேகரன், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின், உடல் அடக்கம் செய்யப்பட்டது.