| ADDED : ஜூன் 04, 2024 06:36 AM
மதுரையில் 340க்கும் மேற்பட்ட அரசு, உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. ஜூன் 10ல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அதற்குள் மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகம், நோட்டுக்களை வாடகை வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கே கொண்டு சேர்க்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மாவட்டத்தில் இதற்காக மதுரை பிரிட்டோ, மேலுார் (ஆண்கள்), திருமங்கலம் (ஆண்கள்) மேல்நிலைப் பள்ளிகளில் புத்தகம், நோட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து வாடகை வாகனங்களில் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில 'ரூட்'களில் இரவு 9:00 மணிக்கு மேல் புத்தகங்கள் வினியோகிக்கப்படுவதால் அதுவரை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிகளில் இருக்க வேண்டியுள்ளது. இரவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: புத்தகம், நோட்டுக்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகிக்க வாகனங்களுக்கான வாடகையை அரசு வழங்குகிறது. ஆனால் தேவையான வாகனம் பயன்படுத்தாமல், 15க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரு வாகனம்பயன்படுத்துவதால் அன்றைய நாளில் கடைசி பள்ளிக்கு வினியோகிக்க இரவு 9:00 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.சேடபட்டி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சில பகுதி பள்ளிகளுக்கு இதுபோல் நடந்துள்ளது. தலைமையாசிரியர்கள் இரவு வரை இருந்தனர். வாகனம் ஏற்பாடு செய்வதில் டி.இ.ஓ.,க்கள் 'கஞ்சத்தனம்' காட்டுவதால் இப்பிரச்னை ஏற்படுகிறது. அதேநேரம் உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களே வாகனங்கள் ஏற்பாடு செய்து புத்தகங்களை எடுத்துச் செல்ல வற்புறுத்தப்படுகிறது. இலவச நோட்டுகள் இன்னும் வினியோகிக்கவில்லை. அதையாவது போதிய வாகன வசதி ஏற்படுத்தி பகலிலேயே வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில் தேவையான வாகனங்கள் ஏற்பாடு செய்து தான் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இரவு வரை தாமதம் ஆகிறதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.