| ADDED : ஜூலை 23, 2025 12:54 AM
மேலுார்; மேலுார் இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார். பாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர்கள். பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் சர்வீஸ், பரோட்டா தயாரிக்கும் இயந்திரம், வணிக வளாகங்களில் பொருட்களை கொண்டு செல்ல எளிய வகை லிப்ட் என பலவகை இயந்திரங்களை கண்டு பிடித்துள்ளனர். தற்போது சமையல் காஸ் சிலிண்டரில் 40 சதவீதம் சேமிக்கும் புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டரில் திரவ பெட்ரோலிய வாயு (எல்.பி.ஜி.,) பயன்படுத்தப்படுகிறது. சிலிண்டரில் இருந்து ஒரு குழாய் மூலம் அடுப்பிற்கு இணைப்பு கொடுத்து அடுப்பை பற்ற வைக்க, அணைக்க ஒரு வால்வும், அதே அடுப்பில் ஆக்சிஜன் நிரம்பிய சிலிண்டரில் இருந்து ஒரு குழாய் மூலம் காஸ் அடுப்பில் இணைத்து மற்றொரு வால்வையும் பொருத்தியுள்ளோம். காஸ் அடுப்பின் வால்வை குறைந்த அளவில் வைத்து பற்ற வைக்கும் அதே வேளையில் ஆக்சிஜன் வால்வை திறந்ததும் தீ வேகமாக எரிவதோடு உணவும் குறித்த நேரத்திற்கு முன்பே தயாராகிறது. அதனால் நேரம், பணம் மிச்சமாகிறது. இப்புதிய தொழில் நுட்பத்தால் 15 நாட்கள் கூடுதலாக சிலிண்டரை பயன்படுத்த முடியும். இத்தொழில் நுட்பத்தை தமிழக அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்றனர். இவர்களை பாராட்ட 99444 37098.