மதுரை வைகையில் தங்கக்குதிரையில் துள்ளி இறங்கினார் அழகர் கோவிந்தா... கோவிந்தா... என மகிழ்ந்தனர் பக்தர்கள்
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக வைகையாற்றில் நேற்று அதிகாலை 5:55 மணிக்கு பக்தர்களின் 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷத்திற்கு இடையே பச்சை பட்டு உடுத்தி தங்கக்குதிரையில் இறங்கி அருள்பாலித்தார் அழகர்.சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 8 ல் தொடங்கியது. வைகையாற்றில் எழுந்தருளவும், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கவும் மே 10ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் அலங்காரத்தில் புறப்பட்டார். நேற்றுமுன்தினம் எதிர்சேவை நடந்தது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயிலில் சுவாமிக்கு நுாபுர கங்கை தீர்த்தத்தால் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்துக்கொண்டு நேற்று அதிகாலை ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளினார்.தங்கக்குதிரையில் அதிகாலை 5:50 மணிக்கு வந்த அழகரை, வெள்ளிக்குதிரையில் காத்திருந்த வீரராகவ பெருமாள் வரவேற்றார். பின்னர் அதிகாலை 5:55 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு இடையே வைகையில் அழகர் எழுந்தருளினார். தீர்த்தவாரியில் தள்ளுமுள்ளு
பின்னர் காலை 10:40 மணிக்கு அழகரை குளிர்விக்க மதிச்சியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இதில் சிலர் தடைசெய்யப்பட்ட விசை பம்புகளை பயன்படுத்தியதை போலீசார் பறிமுதல் செய்தனர். பக்தர்கள் ஆங்காங்கே தடுக்கப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. தடையை மீறி பக்தர்கள், சுவாமி அருகே சென்று தரிசித்தனர். பின்னர் அங்கபிரதட்சணம் செய்தனர்.இதைதொடர்ந்து இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சுவாமி எழுந்தருளினார். இன்று(மே 13) காலை சேஷ வாகனத்தில் எழுந்தருளி, வைகையாறு தேனுார் மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு மதியம் கருடவாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுக்கிறார். இரவு 11:00 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் அலங்காரம் நடக்கின்றன. நாளை காலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்துடன் புறப்பட்டு மதியம் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். இரவு 11:00 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர் பூப்பல்லக்கில் அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார். மே 15ல் செல்லும் வழியில் திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி, மே 16 காலை 10:00 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் இருப்பிடம் செல்கிறார்.
மாணவர் உட்பட மூவர் இறப்பு
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் பூமிநாதன் 63. ஓய்வுபெற்ற மின் பொறியாளர். குடும்பத்துடன் மதுரை வந்தவர் அழகர் வைகையில் இறங்கும் பகுதியில் அழகரை தரிசிக்க காத்திருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கினார். ஆம்புலன்சில் அழைத்துச்சென்றபோது போலீசார் அமைத்திருந்த தடுப்புகளால் உடனடியாக செல்ல முடியவில்லை. பிறகு ஒரு தடுப்பு திறக்கப்பட்டு ஆம்புலன்ஸ் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அருகிலுள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளித்துவிட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் இறந்தார். அரசு தரப்பில் இதுகுறித்து முழுமையாக விசாரித்து நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே மீனாட்சிக்கல்லுாரி அருகே யானைக்கல் பாலத்தின் 3வது துாண் பகுதியில் கண்ணன் 43, என்பவர் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் சங்கர்குமார். இவரது மகன் ஜெயவசீகரன் 16. சொந்த ஊரான மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை குடும்பத்துடன் தரிசித்தனர். பின்னர் நேற்று காலை 10:00 மணிக்கு ஜெயவசீகரன் நண்பர் அய்யனாருடன் ஆற்றில் குளித்த போது மூழ்கி இறந்தார். அய்யனார் சிகிச்சையில் உள்ளார்.