இறைவனைவிட இறைவன் திருவடி உயர்ந்தது நாகை முகுந்தன் பேச்சு
மதுரை :''இறைவனைவிட இறைவனின் திருவடி உயர்ந்தது,'' என ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார்.அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் ராம நவமியை முன்னிட்டு மதுரை எஸ்.எஸ்.காலனி எஸ்.எம். கே.மண்டபத்தில் நடக்கும் கம்பராமாயண தொடர் சொற்பொழிவில் நேற்று அவர்,'திருவடி சூடிய திருமுடி' தலைப்பில் பேசியதாவது:ராமனை கங்கை கரையில் பரதன் சந்தித்தான். காரணம் ராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து அயோத்திக்கு அழைப்பதற்கு திட்டம் கொண்டான். ராமன் வர மறுத்தார். அவரது பாதுகையை பெற்று அதற்கு முடிசூட்டி ராமனின் பிரதிநிதியாக பரதன் இருந்தான்.திருவடி இறைவனைவிட உயர்ந்தது. அதனால்தான் பெரியாழ்வார் மரவடியை வான் பணயம் வைத்து என்கிறார். பணயம் என்று சொன்னதற்கு திருவடியை பரதனிடம் அடகாக கொடுத்து தன்னை மீட்டுக் கொண்டான் என்பது பொருள்.நமக்கு ரூ.2000 வேண்டுமெனில் ரூ.5000 மதிப்பிலான பொருளை அடகு கொடுப்பது வழக்கம். எனவேதான் பெரியாழ்வார் பணயம் வார்த்தையை பயன்படுத்தினார். இறைவனைவிட அவரது திருவடி உயர்ந்தது.வள்ளுவர் கடவுள் வாழ்த்தில் திருவடி பற்றி குறிப்பிடுகிறார். நமது கடவுள்களுக்கு பல கைகள், முகங்கள் இருக்கும். ஆனால் திருவடி மட்டும் 2 இருக்கும். காரணம் 2 கைகளையுடைய மனிதன் அவனும் திருவடியை பற்றிக் கொண்டு உயர்வதற்கு வழியாக கால்களை இரண்டாக கொண்டார். அப்படி கால்களை பற்றிக் கொண்டு கதறும் மனிதனுக்கு, அருளை வாரி வழங்க கைகளை அளவாக கொண்டார் இறைவன். அவரது திருவடியை பற்றுவோம். வாழ்வில் உயர்வோம் என்றார். இன்று (ஏப்.,6) 'தவம் செய்த தவம்' தலைப்பில் சொற்பொழிவு மாலை 6:30 மணிக்கு நடக்கிறது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்துள்ளார்.