உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் போராட்ட ஸ்டன்ட்

திருமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் உதயகுமார் போராட்ட ஸ்டன்ட்

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படாததைக் கண்டித்து சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் நேற்று விருதுநகர் ராஜபாளையம் ரோடு சந்திப்பில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் அவர் பேசியதாவது: 2019ல் சமயநல்லுார் - விருதுநகர் 4 வழிச்சாலையில் காட்டு பத்திரகாளியம்மன் கோவில் அருகே 10 ஏக்கரில் ரூ. 21 கோடி மதிப்பில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்ட சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. இதுவரை தி.மு.க., அரசு புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்கு புதிய பஸ் ஸ்டாண்டை உடனடியாக அமைக்க வேண்டும் என்றார். தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் ரம்யா கூறுகையில், '2019-ல் அவர்கள் தேர்வு செய்த இடத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாகவே அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. மீதி 5 ஏக்கர் இடத்தை அவர்கள் கையகப்படுத்தித் தரவில்லை. பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரிய நிலையில் யாரும் வரவில்லை. தி.மு.க., அரசு அமைந்த பின்பு அரசே முழு செலவில் பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்தது. அந்தப் பகுதியில் நிலம் உள்ளவர்கள் தங்கள் இடத்தைத் தரவில்லை. அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இந்நிலையில் தற்போதுள்ள பஸ் ஸ்டாண்டை இடித்துவிட்டு புதிதாக கட்ட ரூ. 10.80 கோடியில் திட்டமிடப்பட்டது. வழக்கு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டு தற்போது மராமத்து பணிகள் ரூ. 2.70 கோடி மதிப்பில் நடக்கிறது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தவறான தகவலை தெரிவித்துள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி