விக்கிரமங்கலத்தில் வி.ஏ.ஓ., இன்றி தவிப்பு
விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலத்தில் வி.ஏ.ஓ., இல்லாததால் பயிர் காப்பீடு, கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.இந்த ஊராட்சியில் 15 கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., 3 மாதங்களுக்கு முன் இடமாறுதலில் சென்றுவிட்டார். அக்கிராமத்தை கருமாத்துார் வி.ஏ.ஓ., கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். இப்பகுதி திருமங்கலம் கால்வாய் பாசன வசதி பெறும் விவசாய பகுதி. கிணறு, போர்வெல் மூலமும் அதிக அளவில் பூ, காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.இதனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு, விவசாய கடன், மானியம் உள்ளிட்டவற்றுக்காக சிட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றிதழ் வாங்க விவசாயிகள், கிராம மக்கள் வீணாக அலைந்து திரிகின்றனர். காலியாக உள்ள வி.ஏ.ஓ., பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.