பெண் உயிரிழந்த வழக்கு: டாக்டர்கள் ஜாமின் தள்ளுபடி; 6 மாதங்களில் வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவு
மதுரை : கன்னியாகுமரியில் கவனக்குறைவான குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையால் பெண் உயிரிழந்த வழக்கில், வழக்கை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த டாக்டர்களின் மனுவை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மேலும் வழக்கு விசாரணையை 6 மாதங்களில் நடத்தி முடிக்க நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் கணேசன் தனது மனைவி ருக்மணியை பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த பெண் டாக்டர் கருவை கலைத்து குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். கடந்த 2011ல் மனைவியின் கருவை கலைத்து குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்தபோது கவனக்குறைவாக ஆக்சிஜனுக்கு பதில் நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை மருத்துவமனையில் அதிகமாக ஏற்றியுள்ளனர். இதனால் ருக்மணி உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குசென்றார். பின் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2012ல் உயிரிழந்தார். இதுதொடர்பாக டாக்டர்கள், ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய டாக்டர்கள் ரவீந்திரன், விவேகானந்தன், பர்னபாஸ், ராஜ்குமார், தேவி, மாயகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'விதிகளை முறையாக பின்பற்றாமல், டாக்டர்களும், ஊழியர்களும் மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டாலும், அது ஏற்கத்தக்கது அல்ல. அதோடு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆக்சிஜன் போன்ற வாயுக்களை வழங்கிய நிறுவனம் முறையான உரிமம் பெற்றது அல்ல.டாக்டர்கள் உயிரை காப்பாற்றுவார்கள் என நம்பி தான் அவர்கள் சொல்வதையெல்லாம் நோயாளிகள் கேட்கின்றனர். ஆகவே டாக்டர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது ஆகவே மனுதாரர்கள் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.