மயிலாடுதுறையில் மார்ச் 25ம் தேதி குத்தகை விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்; பி.ஆர் பாண்டியன்
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் மார்ச் 25ம் தேதி குத்தகை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் திருமண மண்டபம் ஒன்றில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குத்தகை சாகுபடி விவசாயிகள் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விவசாயி முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூட்டத்தில் பங்கேற்றார்.பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் குத்தகை விவசாயிகள் நில வெளியேற்றம் தீவிரமடைந்துள்ளது. நீதிமன்றங்கள் கோயில் சொத்துக்கள் என்கிற பெயரால் குத்தகை நிலங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது ஏற்கத்தக்கது அல்ல. தமிழக அரசு, குத்தகை விவசாயிகள் நிலங்களை கோயில் சொத்துக்கள் என்கிற பெயரில் ஏலம்விடும் பட்டியலில் இணைப்பதை மறுபரிசீலனை செய்வதற்கு, கொள்கை முடிவெடுத்து நீதிமன்றத்தில் தெரிவித்து விலக்கு பெற வேண்டும். குத்தகை விவசாயிகள் நூறு ஆண்டுகள், இருநூறு ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் நிலையில், குத்தகை பாக்கியை காரணம் காட்டி நில அபகரிப்பாளர் என தெரிவித்து நில வெளியேற்றம் செய்ய முயற்சிப்பது சட்டவிரோதமானது. தருமபுரம் ஆதீனம் போன்ற அறக்கட்டளைகள், அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும். சாலை போடுவதற்கும், சிப்காட் அமைப்பதற்கும், அரசு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிலங்களை கையகப்படுத்துவது என்ற பெயரால் குத்தகை விவசாயிகளின் உரிமையை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே பேரிடர் காலங்களுக்கான குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்து குத்தகை விவசாயிகளின் உரிமையை உறுதியாக்கிட வேண்டும். வாரிசுதாரர்களுக்கு குத்தகைப் பதிவை மாற்றம் செய்து உறுதிப்படுத்த வேண்டும்.குத்தகை விவசாயிகள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி அடையாள அட்டைகள் வழங்குவதற்கு, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 25ம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது என்றார்.கூட்டத்தில் தஞ்சை மண்டலத் தலைவர் வேட்டங்குடி சீனிவாசன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், துணைச் செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம், மாவட்ட கவுரவத் தலைவர் நடராஜன், கடலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.