சீமை கருவேல மரங்களால் காடாக உருமாறிய காவிரிநிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயத்தால் அதிர்ச்சி
சீமை கருவேல மரங்களால் காடாக உருமாறிய காவிரிநிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயத்தால் அதிர்ச்சிநாமக்கல்:'காவிரி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. அதனால், அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடகா மாநிலம், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தை சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில், 4,400 அடி உயரத்தில் காவிரி ஆறு தோன்றுகிறது. அதன் நீளம், 800 கி.மீ., கர்நாடகாவில், குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு ரூரல், சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும்; தமிழகத்தில், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகவும் பாய்ந்து, பூம்புகாரில், வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.வழிநெடுகிலும், விவசாயத்துக்கும், மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் காவிரி, 'வற்றா ஜீவநதி' என, பெயர் பெற்றது. இந்நிலையில், பருவமழை பொய்த்ததால், வறண்ட காவிரியாக மாறி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கூட்டு குடிநீர் திட்டம், நீரேற்று பாசன திட்டங்கள், காவிரி ஆற்றை நம்பியே உள்ளன. தற்போது, காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், ஆங்காங்கே சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. காவிரி ஆறா அல்லது சீமை கருவேல மரங்கள் படர்ந்துள்ள காடா என, கேட்கும் அளவிற்கு அதிக பரப்பளவில் படர்ந்துள்ளது. இது, சொற்ப தண்ணீரையும் உறிஞ்சிக்கொள்வதுடன், ஆற்றின் தண்ணீர் போக்கையும் தடுத்து வருவதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து, விவசாயிகள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: காவிரி ஆறு, குடிநீர் தேவைக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர், வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது, குடிநீர் தேவைக்காக மட்டும், 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால், காவிரி ஆற்றில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீர் கடைமடை வரை செல்லமுடியாத நிலை உள்ளது. இதனால், மக்களின் குடிநீர் தேவைக்கும், விளை நிலங்களின் பாசனத்துக்கும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால், காவிரி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றாவிட்டால், நிலத்தடி நீர் முழுவதும் உறிஞ்சி, வரும் காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அதற்கு முன், சீமை கருவேல மரங்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.