கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் குதுாகலம்
சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது, விட்டுவிட்டு மழை பெய்து வருவதால், கொல்லிமலை முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.கடந்த, இரண்டு நாட்களாக வல்வில் ஓரி விழா நடந்து வருகிறது. இதனால் கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டதால், மக்கள் ஏமாற்றமடைந்தனர்.இருப்பினும் நம் அருவி, மாசிலா அருவி, சிற்றருவி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா மற்றும் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், பெரியசாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, தாவரவியல் பூங்காவில் வைத்திருந்த மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர். கொல்லிமலையில் தங்களது சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு கீழே வரும்போது சோளக்காட்டில் உள்ள பழங்குடியினர் சந்தையில் கொல்லிமலை வாழைப்பழம், பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களையும் வாங்கிக்கொண்டு சென்றனர்.