100 ஆண்டுகளுக்கு பின் தெப்பத்திருவிழா நாமக்கல் கமலாலய குளத்தில் விமரிசை
நாமக்கல்:நாமக்கல் கமலாலய குளத்தில், நுாறு ஆண்டுகளுக்குப்பின், தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. அதில், நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமிகளின், உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நாமக்கல் மாநகரில், மூர்த்தி, தீர்த்தம், தலம் என, மூன்று வகை சிறப்புகளோடு, புராதன சிறப்பு மிக்க மலைக்கோட்டையை ஒட்டி, குடைவரை கோவிலாக நாமகிரி தாயார் உடனுறை நரசிம்ம சுவாமி, அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமி கோவில்கள் அமைந்துள்ளன.பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், நுாறு ஆண்டுகளுக்குப்பின், நேற்று கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதை முன்னிட்டு, கமலாலய குளம் துாய்மைப்படுத்தப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது. தொடர்ந்து, நரசிம்மர், அரங்கநாதர், ஆஞ்சநேயர் சுவாமிகளின், உற்சவ மூர்த்திகளுக்கு நரசிம்ம சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, குளம் அருகே உள்ள நாமகிரி தாயார் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின், கமலாலய குளத்தில், மலர்கள் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு, உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர். தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தெப்பத்திருவிழா நடந்தது.குளத்தைச் சுற்றியிருந்த திரளான பக்தர்கள், தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமிகளை வழிபட்டனர்.