3 வழித்தடத்தில் 5 பஸ்கள் இயக்கம்; எம்.பி., ராஜேஸ்குமார் துவக்கி வைப்பு
நாமக்கல்: பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் வகையில், 3 புதிய வழித்தடத்தில், 5 பஸ்களை, எம்.பி., ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட முதலைப்பட்டியில், 19.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்டை, கடந்த, 22ல், தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து, கடந்த, 10 முதல், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்ல, 10 நிமிடத்திற்கு ஒரு முறை என, அரசு மற்றும் தனியார் பஸ்கள், 117 முறை தினமும் இயக்கப்பட்டு வருகிறது. புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, திருச்சி, துறையூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் மட்டுமே, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கப்படுகின்றன.மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்சில் புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று செல்லும் நிலை உள்ளது. அதனால், பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையில், நேற்று முன்தினம் மாலை, எம்.பி., ராஜேஸ்குமார் புதிய பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, 3 புதிய வழிதடங்களில், 5 பஸ்களை இயக்க அறிவுறுத்தினார்.அதன்படி, மூன்று புதிய வழித்தடங்களில், 5 பஸ்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி., ராஜேஸ்குமார், நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் புதிய பஸ் வழிதடத்தில், கொடியசைத்து தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.