உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 79,095 மனு பதிவு: கலெக்டர் தகவல்
நாமக்கல்:'மாவட்டத்தில் நடந்து வரும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், கடந்த, 11 வரை, 79,095 மனுக்கள் பெறப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில், மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், கடந்த ஜூலை, 15 முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்ட முகாம் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற பகுதிகளில், 13 அரசு துறைகளை சேர்ந்த, 43 சேவைகளும், ஊரக பகுதிகளில், 15 துறைகளை சேர்ந்த, 46 சேவைகளும் வழங்கும் வகையில், மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.அதன்படி, ஜூலை, 15 முதல், கடந்த, 11 வரை, ராசிபுரம் தாலுகாவில், 16,849 மனுக்கள், திருச்செங்கோட்டில், 14,123, நாமக்கல்லில், 12,250, குமாரபாளையத்தில், 11,263, ப.வேலுாரில், 9,260, சேந்தமங்கலத்தில், 8,497, மோகனுாரில், 5,239, கொல்லிமலையில், 1,614 என, மொத்தம், 79,095 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக, 54,277 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், 10,000க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.