நாமக்கல்லில் 90 டன் குப்பை அகற்றம்
நாமக்கல், ஆயுதபூஜையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஒரே நாளில், 90 டன் குப்பை அகற்றப்பட்டது.நாமக்கல் மாநகராட்சியில், 39 வார்டுகளில், 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தினசரி குப்பை வீடு, வீடாக சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டு வருகிறது. அதன்படி, தினமும், 50 டன் வீதம் குப்பை அகற்றப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம், ஆயுதபூஜை, லாரி பாடிகட்டும் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல், வீடுகளையும் சுத்தம் செய்து பொதுமக்கள் ஆயுதபூஜையை கொண்டாடினர். பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் வாழை மரங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்த வாழை மரங்கள் மற்றும் மாவிழை தோரணங்களை, ஆங்காங்கே சாலையோரம் போட்டுவிட்டு சென்றனர். அதனால், நேற்று காலையில் ஆங்காங்கே குப்பை அதிக அளவில் தேங்கி கிடந்தன.அவ்வாறு தேங்கிய குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றி, மக்கும் குப்பைகளை உரம் தயாரிப்பதற்காக நுண்ணுரம் செயலாக்க மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் மக்காத குப்பையை தனியாக பிரிக்கப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.இது குறித்து, மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:நாமக்கல் மாநகராட்சியில், வழக்கமாக தினமும், 50 டன் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆயுதபூஜையை முன்னிட்டு, வாழைமரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டி விழா கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக, குப்பை மிக அதிகளவில் நகரில் குவிந்தது. நேற்று மொத்தம், 90 டன் குப்பை அகற்றப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.