போதமலையில் சாலைப்பணி கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
ராசிபுரம், வெண்ணந்துார் பஞ்., யூனியனுக்கு உட்பட்ட போதமலை கீழூர், மேலுார், கெடமலை ஆகிய, மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கியது. இந்த மலைக்கிராமங்களுக்கு, 139 கோடி ரூபாயில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, நேற்று தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது, தடுப்பு சுவர், குழாய் பாலம், கான்கிரீட் பாலம், மண்சாலை பணிகள் நடந்து வருவதை ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, வசிக்கும் பொதுமக்கள் விபரம், சாலை பணிகள் விபரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து, மலைவாழ் மக்களுடன் கலந்துரைடியானார்.மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, கலைஞர் கனவு இல்லம், பள்ளிகள், ரேஷன் விலைக்கடை, மகளிர் சுய உதவிக்குழு கட்டடம், நுாலகம் மற்றும் தடுப்பணை ஆகியவை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். கலெக்டர் துர்காமூர்த்தி, திட்ட இயக்குனர் வடிவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.