மரவள்ளி கிழங்கு விலை கடும் சரிவு
ப.வேலுார், ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில், மரவள்ளி கிழங்கு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் மரவள்ளி கிழங்குகளை, வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.கடந்த வாரம், ஜவ்வரிசி ஆலைக்கு செல்லும் மரவள்ளி கிழங்கு டன், 6,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 2,500 ரூபாய் வரை குறைந்து, 4,000 ரூபாய்க்கு விற்கிறது. இதேபோல், சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு, 8,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது, டன் ஒன்றுக்கு, 500 ரூபாய் வரை குறைந்து, 7,500 ரூபாய்க்கு விற்கிறது.இதுகுறித்து, மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் கூறியதாவது: மரவள்ளி கிழங்கு மூலம் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி விலை மிகவும் குறைந்துள்ளது. தற்போது, 90 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, 2,700 ரூபாய்க்கு மட்டுமே ஜவ்வரிசி ஆலைகளில், வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் ஜவ்வரிசி தயாரிக்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கை மிக குறைவான விலைக்கு வாங்குவதால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நஷ்டத்தில் விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.