சுடுகாட்டில் தேங்கியுள்ள மழைநீரால் சடலங்களை எரியூட்ட முடியாமல் அவதி
எலச்சிபாளையம்: மணலிஜேடர்பாளையத்தில் உள்ள சுடுகாட்டில், நீண்ட நாட்களாக தேங்கியுள்ள மழைநீரால் சடலங்களை எரியூட்ட முடியாமல் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எலச்சிபாளையம் யூனியன், மணலிஜேடர்பாளையம் பகுதி யில், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால், சுடுகாடு முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதுநாள் வரை வடியாததால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும், இப்பகுதி மக்கள் யாரேனும் இறந்தால், இந்த சுடுகாட்டில் சடலங்களை எரியூட்ட முடிவதில்லை. மாறாக, நாமக்கல், திருச்செங்கோடு பகுதி களில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று, அதிக பணம் செலுத்தி சடலங்களை எரியூட்டி வருகின்றனர். இதனால், ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தண்ணீர் தேங்கி நிற்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருகில் வீடுகளில் வசிக்கும் மக்கள் ஒருவித அச்சத்துடனே வாழ்ந்து வருகின்றனர். எனவே, இடுகாட்டில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் வைத்து அகற்றி, சடலங்களை இங்கேயே எரியூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.