வீட்டுக்கடனுக்கு பாலிசி பெற்றவர் உயிரிழப்பு; வாரிசுக்கு ரூ.37 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
நாமக்கல்: 'வீட்டுக்கடனுக்கு பாலிசி பெற்றவர் உயிரிழந்ததையடுத்து, அவரின் வாரிசுக்கு, 37 லட்சம் ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்க வேண்டும்' என, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணுச்சாமி, 52. இவர், 2023 பிப்.,யில் நாமக்கல்லில் உள்ள, 'இன்டஸ்இன்ட்' என்ற தனியார் வங்கியில், வீடு கட்ட, 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். கடன் நிலுவையில் இருக்கும்போது இறந்து விட்டால், கடனை ஈடு செய்யும் வகையில், வங்கி மூலமாகவே, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், ஒரு லட்சத்து, 69,529 ரூபாய்- செலுத்தி, ஐந்தாண்டுகளுக்கு, 35 லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசியை பெற்றுள்ளார்.இந்நிலையில், 2023 மார்ச்சில், கண்ணுச்சாமி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீட்டு தொகை, 35 லட்சம் ரூபாய் பெற்றுத்தருமாறு, வீட்டுக்கடன் பெற்று இறந்தவரின் மகன் கிருபாகர், 28, வங்கியில் கேட்டுள்ளார். இறந்தவர் ஏற்கனவே இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாததால், இழப்பீட்டு தொகை வழங்க முடியாது எனக்கூறி, அவர் கட்டிய பிரீமியம், ஒரு லட்சத்து, 69,529 ரூபாய் மட்டும், இன்சூரன்ஸ் நிறுவனம், வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளது.இதையடுத்து, இறந்தவரின் மகன் கிருபாகர், வங்கி மீதும், இன்சூரன்ஸ் நிறுவனம் மீதும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிந்து, நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், இறந்தவரின் மகனுக்கு இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை, 35 லட்சம் ரூபாயும், இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் முதல், ஆண்டுக்கு, 9 சதவீதம் வட்டியையும், அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, இரண்டு லட்சம் ரூபாயும், நான்கு வாரங்களுக்குள், வங்கியில் செலுத்த வேண்டும்.மேலும், இந்த பணத்தை, இறந்தவர் வங்கியில் பெற்றுள்ள வீட்டு கடனுக்கு வரவு வைத்து, வீட்டுக்கடன் கணக்கை வங்கி முடித்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகை இருப்பின், அவற்றை இறந்தவரின் மகனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.