சர்க்கரை நோயால் அவதி தந்தை, மகள் தற்கொலை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், என்.கொசவம்பட்டி, யோகா நகரை சேர்ந்தவர் மயில் கண்ணன், 68; ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர். இவரது மனைவி கஸ்துாரி. தம்பதியரின் மகன் பிரதீப் , மகள் பிரீத்தி , 34. மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். கருத்து வேறுபாடால், 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த கஸ்துாரி, மல்லசமுத்திரத்தில் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மயில் கண்ணன், பிரீத்தி மட்டும் தனியாக வசித்தனர். இருவருமே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டனர். அதே பகுதியில் வசிக்கும், தன் தம்பி அன்பழகனின் மகனுக்கு, 'நானும், மகளும் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறோம்' என 'வாட்ஸாப்'பில், மயில் கண்ணன் மெசேஜ் அனுப்பியுள்ளார். நேற்று காலை, இதை பார்த்தவர் அதிர்ச்சியடைந்து சென்று பார்த்த போது, தந்தை, மகள் இருவரும் வீட்டில், 9 அடி ஆழ தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தனர். சர்க்கரை நோய் தொந்தரவால் தற்கொலை செய்கிறோம் என, கடிதம் எழுதி வைத்துள்ளனர். அதை கைப்பற்றி நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.