டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தி ரூ.2.41 லட்சம் வழிப்பறி செய்த கும்பல்
நாமகிரிப்பேட்டை,: டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, 2.41 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, ஆயில்பட்டி நடுக்காலனியை சேர்ந்தவர் முத்துசாமி, 51; இவர், சேலம் மாவட்ட எல்லையில் உள்ள திம்மநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கடையை பூட்டி, விற்பனை தொகை, 2.41 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு டூ-வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கடையில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் முத்துசாமி சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், முத்துசாமியை கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்த பணத்தை வழிப்பறி செய்து தப்பினர். படுகாயமடைந்த முத்துசாமி அதே இடத்தில் மயங்கினார். அந்த வழியாக அதே கடையில் வேலை செய்யும் பாலமுருகன் வந்தபோது, முத்துசாமி மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். முத்துசாமி அளித்தபுகாரின்படி, மங்களபுரம் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.