மேலும் செய்திகள்
10ம் வகுப்பு தேர்வுக்கு செய்முறை பயிற்சி பதிவு
08-Sep-2025
நாமக்கல் :'பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு, வரும், 19 வரை பதிவு செய்து பயன்பெறலாம்' என, அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் சிவகாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 2025-26ம் கல்வி ஆண்டிற்கான, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பிக்கவுள்ள, நேரடி தனித்தேர்வர்களும், (முதன் முறையாக அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே, 2012க்கு முன், பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி, அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், வரும், 19 வரை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகங்களை நேரில் அணுகி, பதிவு கட்டணமாக, 125 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இது பயிற்சி வகுப்பிற்கான பதிவு மட்டுமே.மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்தில், செய்முறை தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான ஒப்புகை சீட்டை பெற்று, பின் இத்துறையால் தனித்தேர்வர்கள் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் நேரடி தனித்தேர்வர்கள், செய்முறை தேர்வு பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டுடனும், ஏற்கனவே தேர்வெழுதி அறிவியல் உட்பட மற்ற பாடங்களில் தோல்வியுற்ற தேர்வர்கள், அறிவியல் செய்முறை தேர்விற்கு விண்ணப்பித்த ஒப்புகை சீட்டு மற்றும் முன் தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து, சேவை மையத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.பதிவு செய்த பின், சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, தேர்வுக்கூட ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய இயலும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பெற்ற தனித்தேர்வர்கள் மட்டுமே செய்முறைத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.மாவட்ட கல்வி அலுவலரால் (இடைநிலை) ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்கு, பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் சென்று, செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள வேண்டும்.பயிற்சி வகுப்புகளுக்கு, 80 சதவீதம் வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே, 2025-26ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான செய்முறை தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி பெற்ற தேர்வர்கள், அந்தந்த மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலரை தொடர்பு கொண்டு, செய்முறை தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விபரம் அறிந்து, செய்முறை தேர்வை தவறாமல் எழுத வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
08-Sep-2025