சீரான குடிநீர் வினியோகிக்க கஸ்துாரிப்பட்டி மக்கள் மனு
நாமக்கல், எருமப்பட்டி அருகே, கஸ்துாரிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியிடம், கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-கஸ்துாரிப்பட்டியில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இருப்பினும் குடிநீர் முறையாக வருவதில்லை. சிலர், குடிநீரை மோட்டார் வைத்து உறிஞ்சி விடுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீருக்கான வரியை வசூல் செய்கின்றனர். ஆனால், குடிநீர் வருவதில்லை. குடிநீர் பிரச்னையால், குழந்தைகளை குறித்த நேரத்தில் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. இதேநிலை நீடித்தால், எங்களது ஆதார் அட்டை, ரேஷன் அட்டையை, தங்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.