சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு லாட்டரி விற்பனை கடை திறப்பு
ப.வேலுார்:சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, ப.வேலுார் பகுதியில் லாட்டரி விற்பனை கடை திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.ப.வேலுார், பழைய பைபாஸ் சாலையில் வெற்றிலை ஏல மண்டி அருகே, மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து லாட்டரி வியாபாரம் ஆன்லைன் மூலம் செய்து வந்தனர். இங்கு, 10க்கும் மேற்பட்டோர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தனர். சில மாதங்களாக போலீஸ் கெடுபிடியால், லாட்டரி வியாபார வீடுகளை பூட்டிவிட்டு இருசக்கர வாகனம் மூலம் லாட்டரி சீட்டுகளை டோர் டெலிவரியாக செய்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சுப முகூர்த்த நாட்களையொட்டி வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க, லாட்டரி விற்பனை அலுவலகத்தில், லாட்டரி சீட்டு விற்பனையை ஆரம்பித்தனர். மேலும், கிளை அலுவலகமாக, ப.வேலுார் மாரியம்மன் கோவில் அருகே ஒரு வீட்டின் மாடியில் லாட்டரி சீட்டு பிரின்ட் செய்யும் அலுவலகமாக செயல்படுகிறது. ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே டீக்கடைகளில் அதிகாலை முதலே லாட்டரி சீட்டுகளை பகிரங்கமாக விற்பனை செய்கின்றனர். இந்த லாட்டரி சீட்டுகளை விவசாய கூலி தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். லாட்டரி சீட்டில் பரிசு விழும் என்ற அற்ப ஆசையில் தினமும் ஏராளமான பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் ஏழை மக்களின் பொருளாதாரம் பெருமளவில் சுரண்டப்படுகிறது. சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சில மாதங்களாக லாட்டரி விற்பனை அலுவலகம் மூடப்பட்ட நிலையில், தற்போது திறப்பு விழா செய்துள்ளதால் குடும்ப தலைவிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பகிரங்கமாக லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீதும், லாட்டரி விற்பனை அலுவலகத்தை வாடகைக்கு விடும் கட்டட உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே லாட்டரி விற்பனையை தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.