மோகனுார் சர்க்கரை ஆலை அங்கத்தினர் 1,005 பேருக்கு ரூ.2.58 கோடி ஊக்கத்தொகை
நாமக்கல், 'மோகனுார் சர்க்கரை ஆலை அங்கத்தினர், 1,005 பேருக்கு, சிறப்பு ஊக்கத்தொகை, 2.58 கோடி ரூபாய், வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: ----------மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர் நலன் கருதி, 2024-25ம் ஆண்டு அரவை பருவத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையாக, டன் ஒன்றுக்கு, 3,151 ரூபாய் -நிலுவையின்றி பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. 2024-25ம் ஆண்டு அரவை பருவத்திற்கு, ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த, 1,005 அங்கத்தினர்களுக்கு, மாநில அரசு வழங்கும் கரும்பு உற்பத்திக்கான சிறப்பு ஊக்கத்தொகையாக, டன் ஒன்றுக்கு, 349 ரூபாய் வீதம், மொத்தம், 2.58 கோடி ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை, நேரடியாக, 1,005 அங்கத்தினர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.விவசாய அங்கத்தினர்கள் அனைவரும், பதிவு செய்யாமல் உள்ள நடவு மற்றும் மறுதாம்பு கரும்பை, 2025-26ம் அரவை பருவம் விரைவில் துவங்க உள்ளதால், பதிவில்லா கரும்பை ஆலைக்கு பதிவு செய்து, அனைத்து மானிய பலன்களையும் பெற்றுக்கொள்ளலாம். மோகனுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் மற்றும் கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.