காவிரியில் வெள்ளப்பெருக்கு தயார் நிலையில் மீட்பு படை
குமாரபாளையம், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான, 120 கன அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரத்தாகும், 75,000 கன அடி நீர், 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோரம் வசித்த பொதுமக்களை பாதுகாப்பாக மீட்ட வருவாய்த்துறையினர், முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி வெள்ள நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலை பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் தயார் நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உள்ளனர்.