உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி வெள்ள பாதிப்பு பகுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு

காவிரி வெள்ள பாதிப்பு பகுதியில் ஆர்.டி.ஓ., ஆய்வு

குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில் காவிரி வெள்ள பாதிப்பு குறித்து ஆர்.டி.ஓ., ஆய்வு செய்தார்.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான, 120 கன அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரத்தாகும், 55,000 கன அடி நீர், 16 கண் மதகு வழியாக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.காவிரி கரையோர பகுதி பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பாக மீட்டு தங்க வைக்க வருவாய்த்துறையினர் பாதுகாப்பு முகாம்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.குமாரபாளையத்தில் கலைமகள் வீதி, அண்ணாநகர், மணிமேகலை வீதி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி வெள்ளநீர் பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நகராட்சி திருமண மண்டபத்திலும், புத்தர் தெரு அரசு உயர்நிலை பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க ஆட்கள் தயார் நிலையில் உள்ளனர்.காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளில் தயார் நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உள்ளனர். குமாரபாளையம் பகுதியில் காவிரி வெள்ள பாதிப்பு குறித்து (பொ) ஆர்.டி.ஓ.,வும், மாவட்ட கலால் துறை உதவி ஆணையருமான ராஜேஷ், பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். தாசில்தார் பிரகாஷ், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ., முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி