குட்கா விற்ற கடைக்கு சீல் ரூ.50,000 அபராதம் விதிப்பு
ப.வேலுார்:ப.வேலுார், பொத்தனுார் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனால் ப.வேலுார், வெங்கமேடு பகுதிகளில், சில தினங்களுக்கு முன் போலீசார் டீக்கடை, மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு வைத்திருந்த, இரண்டு கடைகளில் குட்கா பறிமுதல் செய்தனர். ப.வேலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் ப.வேலுார் போலீசார் குட்கா விற்ற சுல்தான்பேட்டையில் உள்ள டீக்கடை மற்றும் வெங்கமேடு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு, நேற்று, 'சீல்' வைத்து, தலா 25,000 ரூபாய் என, 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வோர், குறிப்பாக பள்ளி, கல்லுாரி அருகே விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தார்.