மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
மல்லசமுத்திரம், நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாமை, கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டார்.நாமக்கல் மாவட்டத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' என்னும் திட்டத்தின் கீழ், உயர் மருத்துவ சேவை முகாம்கள், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், 3 முகாம் வீதம், 15 ஒன்றியங்களில், 45 முகாம், மாநகராட்சிக்கு மூன்று என, மொத்தம், 48 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள், மருத்துவ வசதி குறைவாக உள்ள நகர்ப்புற பகுதிகளை தேர்வு செய்து, வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் நடத்தப்படுகிறது.அதன்படி, மல்லசமுத்திரம் ஒன்றியம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முகாம் நடந்தது. அதில், 17 துறைகளை சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று, 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதயநோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் என, உள்ளிட்டோரை பரிசோதனை செய்து, சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.தேவைப்படும் நோயாளிகளுக்கு, தலைமை மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.முகாமை ஆய்வு செய்த கலெக்டர் துர்கா மூர்த்தி, வழங்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள், பரிசோதனைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாவட்ட நல அலுவலர் பூங்கொடி, துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.