நின்றிருந்தவர் மீது டூவீலர் மோதி 3 பேர் படுகாயம்
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, நின்றிருந்தவர் மீது, டூவீலர் மோதியதில் மூன்று பேர் காயமடைந்தனர். குமாரபாளையம் அருகே கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 32, லாரி ஓட்டுனர். இவர் சேலம்-கோவை புறவழிச்சாலையில் பல்லக்காபாளையம் பிரிவு பகுதியில், நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த யமஹா டூவீலர் ஓட்டுனர், இவர் மீது மோதினார். இதில் மோகன்ராஜ், டூவீலர் ஓட்டுனரான பெருந்துறையை சேர்ந்த சரவணன், 25, பின்னால் உட்கார்ந்து வந்த பிரதீஷா, 21, மூவரும் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். ஈரோடு தனியார் மருத்துவமனையில் மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.