நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் ரூ.23.09 லட்சத்திற்கு காய்கறி விற்பனை
நாமக்கல்: நாமக்கல் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 52 டன் காய்கறிகள், 23.09 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அறுவடை செய்து, இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அதிகளவில் பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்கு ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம். அதன்படி, நேற்று உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்தது. 154 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதில், 38,685 கிலோ காய்கறிகள், 13,870 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள் என மொத்தம், 52,590 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 10,518 வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 23 லட்சத்து, 9,080 ரூபாய்க்கு விற்பனையானது.