மேலும் செய்திகள்
கால்நடை மருத்துவ கல்லுாரி விளையாட்டு போட்டி
24-Apr-2025
நாமக்கல்:பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கான விளையாட்டு மற்றும் தடகளத்தில், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உறுப்பு கல்லுாரிகளின், மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டி, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு நாட்கள் நடந்தது. இருபாலருக்கான கூடைப்பந்து மற்றும் தடகள விளையாட்டு போட்டிகளில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், ஒன்பது உறுப்பு கல்லுாரிகளை சேர்ந்த, 313 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரி அணியும், பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய அணியும் வெற்றி பெற்றன. தடகள போட்டிகளில் ஆண்கள், பெண்களுக்கான தனி நபர் சாம்பியன் பட்டத்தை, நெல்லை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர் முகமது சாட் மற்றும் காவியா ஆகியோர் வென்றனர்.நிறைவு விழாவிற்கு, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜூ தலைமை வகித்தார். விளையாட்டு செயலாளர் வாசன் வரவேற்றார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை க்ரிஷி நியூட்ரிஷன் நிறுவன மேலாண் இயக்குனர் ராமமூர்த்தி, கோவை அக்க்ஷயா கோழிப்பண்ணை ஆலோசனை நிறுவன தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பதிவாளர் மற்றும் துணை வேந்தர் (பொறுப்பு) நரேந்திரபாபு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு சான்றிதழ், கோப்பை வழங்கினார். நடப்பாண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை உறுப்பு கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் தடகள போட்டியில், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தது.
24-Apr-2025