சுங்கவரி வசூலை ரத்து செய்யக்கோரி இளம் விவசாயி சங்கம் ஆர்ப்பாட்டம்
ப.வேலுார்:-ப.வேலுார் வாரச்சந்தையில் விவசாயிகளிடம் வசூல் செய்யும் சுங்கவரியை ரத்து செய்யக்கோரி, இளம் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்., அருகே, இளம் விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இளம் விவசாயிகள் சங்க மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி கலந்துகொண்டார். ஆர்ப்பாட்டத்தில், ப.வேலுார் வாரச்சந்தையில் சுங்கவரி வசூல் உரிமம் பெற, 'சிண்டிகேட்' அமைத்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுத்துள்ளனர். இதனால், டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட பல மடங்கு உயர்த்தி சுங்க கட்டணம் வசூலிப்பதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்யும் விவசாய பொருட்களுக்கு, சுங்க கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன், மாநில செயலாளர் சவுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரகாஷ், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் உள்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.