| ADDED : ஆக 11, 2024 11:27 PM
மேட்டுப்பாளையம்:இலுப்பநத்தத்தில் உள்ள லட்சுமி நரசிங்க பீடத்தில், அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆடி மாத சுவாதி நட்சத்திர வைபவம் நடந்தது. சிறுமுகை அருகே இலுப்பநத்தத்தில், லட்சுமி நரசிங்க பீடத்தில், அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருபல்லாண்டு, கால சந்தி பூஜை, புண்யா வசனம், கலச ஆவாஹனம் ஆகிய பூஜைகள் நடந்தன. ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காப்பதற்காக, ஹோமங்கள் நடந்தன. இதில் சுதர்சன ஹோமம், லட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவர், புத்திர சந்தான ஹோமம், திருமண தோஷ நிவர்த்தி ஹோமம், நவகிரக தோஷ நிவர்த்தி ஹோமம், ஆயுள் ஹோமம் ஆகியவை நடந்தன. அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, 21 திரவிய திருமஞ்சனம் நடந்தது. மகா சங்கல்பம், அஷ்டோத்திரம் சற்று முறை சேவித்த பின், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாக பூஜைகளை அனந்தாழ்வார் செய்திருந்தார்.