UPDATED : மே 05, 2024 12:40 AM | ADDED : மே 05, 2024 12:18 AM
ஊட்டி:நீலகிரி மாவட்ட நிர்வாக செய்தி குறிப்பு:நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக சுற்றுலா பயணியர் வருகை புரிவதை முன்னிட்டு, இ - பாஸ் முறையை அமல்படுத்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் டி.என்.இ.ஜி.,வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.மென்பொருளை பயன்படுத்தி சுற்றுலா பயணியர், வணிகம், வியாபார வேலையாக வருபவர்களும் இ - பாஸ் பதிவு செய்து நீலகிரிக்கு பயணம் மேற்கொள்ளலாம். இ - பாஸ் தேவைப்படுபவர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் வாயிலாக, இ - பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இந்த இ - பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, கியூ ஆர் குறியீடு வாயிலாக தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், நம் நாட்டை சார்ந்த சுற்றுலா பயணியர் அவர்களது மொபைல் எண், வெளிநாடுகளிலிருந்து நம் மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் அவர்களது இ - -மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விபரங்களை சமர்ப்பித்து, இ - பாஸ் பதிவு செய்து கொள்ளலாம். வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட எண் கொண்ட ஒவ்வொரு வாகனங்களுக்கும் இ - பாஸ் பதிவு செய்து வருகை தர வேண்டும்.அரசு பஸ்களில் பயணிக்கும் சுற்றுலா பயணியர் இ - பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் 'டி. என் 43' எண் கொண்ட வாகனங்களுக்கு இ - பாஸ் தேவையில்லை.வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களை வாங்கி, நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள், வாகனத்தின் அசல் பதிவு சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால், ஆவணங்களை சரிபார்த்து, உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் இ - பாஸ் வழங்கப்படும்.மேலும், இ - பாஸ் பதிவு நடைமுறையானது மாவட்டத்தில் ஜூன் 30ம் தேதி வரை இருக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளது.