| ADDED : மே 22, 2024 12:12 AM
ஊட்டி;ஊட்டி நகரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.நீலகிரி மாவட்டத்தில், இ--பாஸ் நடைமுறை அமலால் குறிப்பிட்ட வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஊட்டி நகரில் பார்க்கிங் வசதி உள்ளிட்ட போதிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாத காரணத்தினால், நாள்தோறும் பெய்து வரும் மழைக்கு இடையே வாகனங்கள் ஆங்காங்கே சென்று வருவதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது . இந்நிலையில், மலர்கண்காட்சி தேதி ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். நேற்று, ஊட்டி நகரில் தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, ஸ்பென்சர் சாலை, படகு இல்லம், பஸ் ஸ்டாண்ட், பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள், உள்ளூர் வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கோர்ட் உத்தரவுப்படி இ-பாஸ் திட்டம் அமலில் இருந்தாலும், ஊட்டியில் போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததால், போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது.எனவே, அடுத்த கோடை சீசனுக்கு 'பார்க்கிங்' வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.