பார்த்தீனியம் செடி அகற்றம்; பழங்குடியினருக்கு வேலை
கூடலுார் : நீலகிரி மாவட்டம், மசினகுடியில், வனம் பசுமைக்கு மாறினாலும், பயனற்ற பார்த்தீனியம் மற்றும் களைச் செடிகள் அதிகரித்து வருகின்றன. அவை வளரும் பகுதியில், தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள், புற்கள் வளர்வதில்லை. இதனால், வனவிலங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும், பார்த்தீனியம் பூக்களால் மனிதர்களுக்கு மட்டுமின்றி வன விலங்குகளுக்கும், சுவாசம் தொடர்பான நோய்கள், ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்நிலையில், முதுமலை தெப்பக்காடு முதல் மசினகுடி வரையிலான வனத்தின் ஓரங்களில், பார்த்தீனியம் மற்றும் களைச் செடிகளை அகற்றும் பணியை வனத்துறையினர் துவக்கியுள்ளனர். இந்த பணியில் பழங்குடியினர் ஈடுபடுத்தப்படுவதால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'முதல் கட்டமாக சாலையோரம், பார்த்தீனியம் மற்றும் களைச் செடிகள் அகற்றும் பணி நடக்கிறது. மற்ற பகுதிகளிலும் இப்பணி தொடரும். பழங்குடியினருக்கு, வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், இதில் அவர்களை ஈடுபடுத்தி வருகிறோம்' என்றனர்.