உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு பாதுகாப்பு; கோவை சரக டி.ஐ.ஜி., உறுதி

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு பாதுகாப்பு; கோவை சரக டி.ஐ.ஜி., உறுதி

ஊட்டி; 'ஊட்டியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பான முறையில் சுற்றுலா பயணியர் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என, கோவை சரக டி.ஐ.ஜி.,தெரிவித்தார். ஊட்டியில், கோடை சீசன் காலத்தில் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் ஓய்வு எடுக்கும் வகையில், நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட ஓய்வு விடுதியை கோவை சரக டி.ஐ.ஜி., சசிமோகன் திறந்து வைத்தார். தொடர்ந்து, நிருபர்களிடம் கூறியதாவது:ஊட்டிக்கு கோடை சீசனில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருகின்றனர். கோடை சீசன், மலர் கண்காட்சியின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆய்வு செய்து வருகிறோம். போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும், சுற்றுலா பயணியருக்கு எந்த வித குற்ற சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பான முறையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊட்டி நகரில் தற்போதுள்ள சி.சி.டி.வி., கேமராக்களின் எண்ணிக்கை போலீசார் சார்பில் அதிகரிக்கப்படும். சுற்றுலா பயணியர் வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் கூடுதலாக சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். ஊட்டியில் உள்ள பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி இருந்தால், அதில் ஒரு சி.சி.டி.வி., கேமராவை மக்கள் நடமாட கூடிய பகுதிகளை நோக்கி வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கும் போது குற்ற சம்பவங்களை எளிதில் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார். உடன் எஸ்.பி.,நிஷா உட்பட போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ