கனமழைக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ;ஊட்டியில் 4 செ.மீ., மழை பெய்தது
ஊட்டி;-ஊட்டி, குன்னுாரில் பெய்த கன மழைக்கு சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று மதியம், 3:00 மணிக்கு இடி, மின்னலுடன் துவங்கிய மழை மாலை வரை தொடர்ந்து பெய்தது. படகு இல்லம் சாலையில், மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்து கொண்டு இதமான காலநிலையில் சுற்றுலா பயணியர் மலர்களை ரசித்தனர். குன்னுாரில் பெய்த மழைக்கு, சிங்காரா பகுதியில் சாலையோர இருந்த ராட்சத மரம் விழுந்ததில் இரு கார்கள் சேதமானது. கார் டிரைவர் நந்தகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கு, இருப்புறம் வாகனங்கள் அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குன்னூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 'பவர் ஷா' உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின், போக்குவரத்து சீரானது. ஊட்டி, குன்னுார் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு பின் நிலவிய இதமான காலநிலையை சுற்றுலா பயணியர் ரசித்தனர். மழை அளவு:
நேற்று, மாலை, 5:00 மணி நிலவரப்படி, ஊட்டி, 40 மி.மீ., கோடநாடு, 14 மி.மீ., எமரால்டு, 12 மி.மீ., கோத்தகிரி, 9 மி.மீ., அவலாஞ்சி, 6 மி.மீ., மழை பதிவானது. கோத்தகிரி, மஞ்சூர், கூடலுார் உட்பட பிற பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.