நீலகிரியில் 62 ஆசிரியர் பணியிடம் காலி: அரசு பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு அரசு பள்ளி மாணவர்களின் கல்வியில் பாதிப்பு
பந்தலுார்: நீலகிரி மாவட்டம், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 62 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில், அரசு கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்த்து, கல்வி வளர்ச்சியில் தங்கள் கவனத்தை ஏற்படுத்திய பெற்றோர், ஆங்கில கல்வியின் மோகத்தால் தனியார் பள்ளிகளை நாடி வருகின்றனர். கொரோனா தொற்று பரவியதற்கு பின்னர், மீண்டும் அரசு பள்ளிகளுக்கு மாற துவங்கினர். இதனைால், பல அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மாநில அரசு கல்வித்துறை, அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்களை நியமிக்காத நிலையில், மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதில், 31- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சமூக அறிவியல் ஆசிரியர்களும், 19-கணித ஆசிரியர்கள், 12 தமிழ் ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளது. இதனால், இந்த பாடங்களில் மாணவர்கள், அரசு பொது தேர்வுகளில் வெற்றி பெற முடியாத சூழலில், பாதிக்கப்பட்டு உள்ளனர். கூடலுார் கல்வி விழிப்புணர்வு மன்ற பொது செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில், ''மலை மாவட்டமான நீலகிரி பகுதியை சேர்ந்த மாணவர்கள் உள்ளூர் அரசு பள்ளிகளில் சேர்ந்து தங்கள் கல்வி தரத்தை மேம்படுத்திக் கொள்ள சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அரசு கல்வித்துறை போதிய ஆசிரியர்களை நியமிக்காத நிலையில் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. இந்த நிலை மாற அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்க வேண்டியது அவசியமாகும்,'' என்றார்.