கல்லறை திருநாளில் இறந்தவர்களை நினைவு கூர்ந்து சிறப்பு பிரார்த்தனை
ஊட்டி; ஊட்டியில் கல்லறை திருநாளை ஒட்டி, ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோரை நினைவு கூர்ந்து கல்லறையில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். உலக முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவ., 1ம் தேதி கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்தநாளில் இறந்த முன் னோரை நினைவு கூர்ந்து அவர் களுக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம். நடப்பாண்டு நடந்த கல்லறை திருநாளில், ஊட்டி புனித மரியன்னை ஆலயத்தில் தேவாலயத்தின் அருகே உள்ள தோட்டத்தில் நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது.காந்தள் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு சென்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், தங்களது உறவினர்கள், முன்னோரின் கல்லறையில் மலர்கள் வைத்து அலங்கரித்தனர். பின், அவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி குடும்பத்தினருடன் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதேபோல, மற்ற கத்தோலிக்க ஆலயங்களிலும் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்பட்டது.