மாவட்டத்தில் 300 ஏக்கரில் அன்னிய மரங்கள் அகற்றம்
ஊட்டி ;நீலகிரி வனப்பகுதிகளில் இதுவரை, 300 ஏக்கரில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.மாநிலம் முழுவதும் வனப்பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க, 2.60 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வனத்துறை மூலம் நடந்து வருகிறது. மறுபுறம், 65 சதவீதம் வனம் சூழ்ந்த பகுதியான, நீலகிரியில் கற்பூரம், சீகை,உண்ணி செடி உள்ளிட்ட அன்னிய மரம் அதிகரித்து உள்ளதால் வன விலங்குகளுக்கான தாவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரியில் உள்ள கற்பூரம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.தொடர்ந்து, நீலகிரி வனக்கோட்டம் சார்பில், ஊட்டி, குந்தா, குன்னுார், கோத்தகிரி, கூடலுார், பந்தலுார், அவலாஞ்சி, அப்பர்பவானி, கோரகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை, 300 ஏக்கர் பரப்பளவில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்டன. தற்போது, ஊட்டி அருகே தலைகுந்தா, அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்றும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.